கடல்சார்ந்த உணவு பொருட்கள் ஏற்றுமதியில் உலகிலேயே இந்தியா முதலிடம் - எல்.முருகன்

 
l

கடல் சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

நாமக்கல்லில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: தேசிய மீன்வளவாரியத்தில், 7,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்துக்கு மட்டும், 1,800 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இதன்மூலம் திருவள்ளூர், திருவொற்றியூர், நாகை, விழுப்புரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில், மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்துதல், மீன் சந்தைகளை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடல் மற்றும் கடல் சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதில், இந்தியா உலகில் முதலிடம் வகிக்கிறது.

மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்ததுபோல், கொச்சின், சென்னை, விசாகப்பட்டினம், பாரதீப், மேற்குவங்கம் ஆகிய, ஐந்து மீன்பிடி துறைமுகங்கள், தலா, 100 கோடி ரூபாய் மதிப்பில், நவீனப்படுத்தப்பட உள்ளன. கடல்பாசி தொழிலை மேம்படுத்த, 120 கோடி ரூபாய் மதிப்பில், ராமேஸ்வரத்தில், திட்டத்திற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடக்கிறது.நாடு முழுவதும், கால்நடைகளை பாதுகாக்க, கோமாரி நோய் தடுப்பூசி, 100 சதவீதம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல்லுக்கு தனியாக வானொலி நிலையம் தேவை ஏற்படும் பட்சத்தில், அதுகுறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு கூறினார்.