தமிழகத்திற்கு 5 மாதங்களுக்கு கோதுமை கிடையாது.. - மத்திய உணவுத்துறை தகவல்.

 
ரேஷன் கடைகள்

தமிழகம் உள்ளிட்ட  11 மாநிலங்களில் பிரதமரின் இலவச உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுப் பொருட்களில் கோதுமை விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் நியாய விலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை  அரிசி, சர்க்கரை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பிரதம அமைச்சர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும், நாடு முழுவதும்  உள்ள  சுமார் 81  கோடி பேருக்கு  5 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது.  கொரோனா பரவல் காரணமாக . இரண்டு ஆண்டுகள் விரிவுபடுத்தப்பட்ட இந்த திட்டம், வருகிற  அக்டோபர் வரை ஆறு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.கோதுமை பயிர்

இந்தச் சூழலில் நடப்பாண்டு அதிக வெப்பத்தின் காரணமாக கோதுமை பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால்,  பயனாளிகளுக்கு கோதுமைக்கு பதிலாக கூடுதலாக அரிசி  வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  கோதுமை கொள்முதல் செய்வதும் தற்காலிகமாக  நிறுத்தப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக மாநில உணவுத்துறைக்கு,   மதிய உணவு துறை செயலர் சுதன்சு பாண்டே எழுதியுள்ள கடிதத்தில்,   தானியங்களை  எவ்வாறு விநியோகிப்பது என்பதை மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.  தமிழ்நாடு , கேரள ,  பீஹார் போன்ற  மாநிலங்களில் பிரச்சனை இல்லை என்றாலும் கூட,   கோதுமைக்கு முன்னுரிமை இருப்பதால் உத்திர பிரதேசத்தில் சில சிக்கல் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

கோதுமை

 உள்நாட்டில் கோதுமை பயன்பாடு மற்றும் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுதன்சு பாண்டே தெரிவித்துள்ளார். நடப்பு கொள்முதல் பருவத்தில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக குறைந்த அளவில் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.  மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் 55.50 லட்சம் டன் கோதுமையை சேமிக்க முடியும் என்று உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.