நாடு முழுவதும் களைகட்டும் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்..
நாடு முழுவதும் இன்று மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கோலாலகமாக கொண்டாடி வருகின்றனர். தை முதல் நாளான நேற்று தைப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், இன்று விவசாயத்தில் உழவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளை சிறப்பிக்கும் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. விவசாயத்தில் மனிதர்களுக்கு இணையான உழைப்பு மாடுகளுக்கும் உண்டு.. அதேபோல் பசுக்களை நம்பியும் பல குடும்பங்கள் இருக்கின்றன. இன்றைய நவீன காலத்தில் ட்ராக்டர்கள் வந்துவிட்டாலும், மாடுகளின் உழைப்பை காலப்போக்கில் மனிதம் மறந்து விட கூடாது என்பதற்காகவும், உழைப்பை அங்கீகரித்து அவற்றை கவுரவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சூரியனை வழிபட்ட அடுத்த நாள் மாடுகளை வணங்க கொண்டாடப்படுவது தான் மாட்டு பொங்கல்.
இந்த நாளில் மாடுகள் மற்றும் கன்றுகள் வசிக்கும் தொழுவத்தை நன்கு சுத்தம் செய்யப்படுகிறது. பின் மாடுகளை குளிப்பாட்டி சுத்தம் செய்து அவற்றின் கொம்புகளில் வர்ணம் பூசுவது, , சலங்கைகள் கட்டி விடுவது, மேலும் மாடுகளுக்கு பல வண்ணங்களில் புதிய மூக்கணாங் கயிறு, தாம்பு கயிறு உள்ளிட்டவற்றையும் அணிவித்து அலங்கரிப்பர். மாடுகளுக்கு நெற்றியில் மஞ்சள், குங்குமம் திலகமிட்டு அவற்றிற்கு மாலையணிவித்து, சர்க்கரை பொங்கலிட்டு , தீபாராதனைகள், சாம்பிராணி புகைகள் காட்டி கொண்டாடுவர். அதன்படி கிராங்களில் மாட்டுப்பொங்கள் களைகட்டியுள்ளது. முன்னதாகவே மாட்டுக்கான பலவண்ண கயிறுகள், சலங்கைகள், மணிகள் விற்பனையும் அமோகமாக நடைபெற்றது. அத்துடன் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடத்தப்படும்..