சென்னையில் நேற்று ஒரே நாளில் சாலை விதி மீறலில் ஈடுபட்ட 607 நபர்கள் மீது வழக்குப்பதிவு

 
chennai

 
சென்னையில் நேற்று ஒரே நாளில் சிறப்புத் தனிக்கை மூலம் அதிக ஒலி எழுப்பும் ஹார்ன், மியூசிக்கல் ஹார்ன் மற்றும் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்தப்பட்ட வாகனங்களை ஓட்டி வந்த நபர்கள் உட்பட சாலை விதி மீறலில் ஈடுபட்ட 607 நபர்கள் மீது சென்னை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை மாநகரில் விபத்துகளை குறைக்கவும், சீரான போக்குவரத்தை உறுதி செய்யவும் போக்குவரத்து காவல் துறையினர் பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் ரேஸ் மேற்கொள்பவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்து அவர்கள் மீது கைது  நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிறப்பு வாகனத் தணிக்கைகளை மேற்கொண்டு சாலை விதிகளை மீறியும், மோட்டார் வாகனச் சட்டத்துக்கு எதிராகவும் செயல்படுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 1 ஆம் தேதி சென்னை போக்குவரத்து போலீசார் மேற்கொண்ட சிறப்பு வாகனத் தணிக்கையில் மோட்டார் வாகன விதிகளுக்குப் புறம்பான குறைபாடுள்ள வாகன பதிவு எண் தகடு, மடக்கி வைக்கும் பதிவெண் தகடு மற்றும் அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்களை நிறுத்தியது தொடர்பாக 1036 வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். 

chennai

இந்நிலையில் நேற்றும் போக்குவரத்து போலீசார் மேற்கொண்ட சிறப்பு வாகனத் தணிக்கையில், ஒரே நாளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன், மியூசிக்கல் ஹாரன், அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்தப்பட்ட வாகனங்களை இயக்கி வந்த 607 நபர்கள் மீது வழக்குப் பதிவு  செய்துள்ளனர். குறிப்பாக அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பொருத்திய வாகனங்களை இயக்கிய 163 நபர்கள், மியூசிக்கல் ஹாரன் பொருத்திய வாகனங்களை இயக்கிய 17 நபர்கள் மற்றும்
அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்திய வாகனங்களை இயக்கிய 103 நபர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், மோட்டார் வாகன விதிகளுக்குப் புறம்பாக பதிவு எண் தகடு பொருத்திய 291 நபர்கள்  உடன் சேர்த்து மொத்தம் 607 நபர்கள் பேர் மீது சென்னை போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சிறப்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என போக்குவரத்து காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.