நேருக்கு நேர் மோதிக்கொண்ட கார் - பேருந்து : 3 பேர் பலி.. அடையாளம் தெரியாமல் உருகுலைந்துபோன கார்..
திருப்பூர் அருகே தனியார் பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து திருப்பூர் நோக்கி ஐந்து பேர் காரில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தனர். அப்போது கொடுவாய் காக்காபள்ளம் என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த போது திடீரென கார் ஓட்டுநனரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அதேநேரம் திருப்பூரில் இருந்து பழனி நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்துள்ளது. இதில் காரும் எதிரே வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து நேருக்கு நேர் அதிவேகமாக மோதிக்கொண்டது. பயங்கர சத்தத்துடன் இந்த கோர விபத்து அரங்கேறியுள்ளது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது , காரில் பயணித்த ஐந்து பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு கிடந்தனர். அவர்களில் பேரில் மூன்று பேர் உயிரிழந்து கிடந்துள்ளனர்.
மேலும் 2 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் நிகழ்விடத்திற்கு வந்த ஊதியூர் காவல் துறையினர் படுகாயமடைந்த மகேஷ் மற்றும் கிஷோர் ஆகியோரை திருப்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் விபத்தில் உயிரிழந்த வீரக்குமார், முருகேசன் மற்றும் சஜித் ஆகியோரின் உடல்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த கோர விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் சிக்கிய கார் அடையாளம் தெரியாத அளவிற்கு உருகுலைந்து போய் கிடந்துள்ளது. காரின் உதிரிபாகங்கள் ஆங்காங்கே சாலையில் சிதறிக்கிடக்கின்றன. மேலும் விபத்துக்குள்ளான பேருந்தின் முன் பக்கம் கடுமையாக சேதமடைந்துள்ளது.