வருகிற 26ம் தேதி முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்..
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்த மாதம் கூட உள்ள நிலையில் வருகிற 26ம் தேதி காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும், இந்த அமைச்சரவை கூட்டத்தில் அடுத்து நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து விரிவாக ஆலோசிக்கபட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
அத்துடன் பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரம், ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம், புதிய தொழில் முதலீடுகள், வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவைகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசிக்க இருக்கிறார். அதுமட்டுமின்றி பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தல்களை வழங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே கடந்த மாத இறுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போதே மேற்கூரிய அனைத்து விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தக் கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தே விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்தமுறை அக்டோபர் மாதம் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், வருகிற 26-ம் தேதி அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்த இருக்கிறார்.