அதிமுக அலுவலகத்தில் வெள்ளி வேல், செங்கோல்கள் திருட்டு - சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

 
cv

அதிமுக தலைமை அலுவலகத்தில் வெள்ளி வேல், செங்கோல்கள் திருடப்பட்டதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். 

சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இரண்டு தரப்புக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் 2 காவலர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் வருவாய் துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் தனித்தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.   மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , அதிமுக அலுவலக சீலை அகற்றக் கூறிய வழக்கில் எடப்பாடி பழனிசாமிடம் தலைமை அலுவலக சாவியை வழங்க  உத்தரவிட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. 

CV Shanmugam

இந்நிலையில், அதிமுக தலைமை கழகத்தில் வெள்ளி வேல், செங்கோல்கள் திருடப்பட்டதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக அலுவலகம் திறக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது: அதிமுக அலுவலகத்தில் 2-வது மாடியில் இருந்த முக்கியமான பரிசுப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் காணவில்லை.கடந்த 11ம் தேதி நடந்த கலவரத்தின் போது அலுவலக பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த நினைவுப் பரிசுகள் மாயமாகியுள்ளது. காணாமல் போன பொருட்கள் அனைத்தும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவுப் பரிசுகளாக கொடுக்கப்பட்டவை. இவ்வாறு தெரிவித்துள்ளார்.