அதிமுக அலுவலகத்தின் அசல் பத்திரத்தை காணவில்லை - சிவி சண்முகம் போலீசில் புகார்

 
CV Shanmugam

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் அசல் பத்திரத்தை காணவில்லை என ராயப்பேட்டை காவல்நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் புகார் அளித்துள்ளார். 

சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இரண்டு தரப்புக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் வருவாய் துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் தனித்தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.   மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , அதிமுக அலுவலக சீலை அகற்ற உத்தரவிட்டதோடு, எடப்பாடி பழனிசாமிடம் தலைமை அலுவலக சாவியை வழங்க உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. 

cv

இதனிடையே அதிமுக அலுவலகத்தில் இருந்த வெள்ளி வேல், செங்கோல்கள் திருடப்பட்டதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார்.   2-வது மாடியில் இருந்த முக்கியமான பரிசுப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் காணவில்லை எனவும், கடந்த 11ம் தேதி நடந்த கலவரத்தின் போது அலுவலக பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த நினைவுப் பரிசுகள் மாயமாகியுள்ளது எனவும் கூறியிருந்தார். 

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தின் அசல் பத்திரத்தை காணவில்லை என ராயப்பேட்டை காவல்நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் புகார் அளித்துள்ளார். அதிமுக அசல் பத்திரம் காணாமல் போனது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மீது சி.வி.சண்முகம் புகார் அளித்துள்ளார்.