முதல்வர் ஸ்டாலின் தாயார் மருத்துவமனையில் அனுமதி
முதல்வர் மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை குறித்து கேட்டறிந்தார் ஸ்டாலின்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவியார், முதல்வர் ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள், கருணாநிதி இருந்தபோது வயது முதிர்வு காரணமாக சென்னை கோபாலபுரம் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.
கருணாநிதியின் மறைவுக்கு பின்னரும் கோபாலபுரம் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக, மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டி இருப்பதால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறப்பு மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தகவல் அறிந்ததும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்.
நுரையீரல் பிரச்சனை ஏற்பட்டதால் கடந்த மார்ச் மாதத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தயாளு அம்மாள் அப்போது சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்த நிலையில் தற்போது உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் மீண்டும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.