சீர்காழியிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு - பொதுமக்களுக்கு உதவி

கடலூரை தொடர்ந்து சீர்காழியில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கினார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த காலூத்த தாழ்வு பகுதியினால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. அதிலும் கடலூர், மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய பகுதிகளில் அதீத கன மழை பெய்து வருவதால் அப்பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வரலாறு காணாத மழையினால் சீர்காழி பெரும் பாதிப்பை சந்தித்து இருக்கிறது. இதை அடுத்து டெல்டா மாவட்டங்களில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்து வருகிறார். கடலூர் மாவட்டத்தில் கீழ் பூவாணிகுப்பம் பகுதியில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த புகைப்படங்களை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். கனமழையினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் , நடவடிக்கைகள் வெள்ளத்தடுப்பு திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து கொண்டார். பின்னர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் நிவாரண உதவிகள் வழங்கினார்.
கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார். கொள்ளிடம் அருகே உமையாள்பதி கிராமத்தில் மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். சீர்காழி பகுதியில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய், போர்வை, அரிசி, மளிகைபொருட்கள் உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை வழங்கினார்.