தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

 
MK Stalin

தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்

தமிழறிஞர் ஔவை நடராஜன்  உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 85. தமிழறிஞர் ஔவை நடராஜன் சிந்தனையாளர், பேச்சாளர். தமிழ், ஆங்கிலம் எனும் இரு மொழிகளிலும் சிறப்பாகப் பேசும் திறன் கொண்டவர். 1992 முதல் 1995 வரை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், செம்மொழி தமிழ் உயராய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.இவர் 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு எனும் ஊரில் உரைவேந்தர் எனப் புகழப்படும் தமிழறிஞர் ஒளவை துரைசாமி மற்றும் லோகாம்பாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். மதுரை தியாகராசர் கல்லூரியில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டம் (Master of Arts) பெற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் “சங்க இலக்கியத்தில் பெயரிடு மரபு” என்னும் பொருளில் ஆய்வு செய்து 1958ஆம் ஆண்டில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். அதன் பின்னர் “சங்க காலப் புலமைச் செவ்வியர்” என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

avvai natarajan

ஔவை நடராசன் மதுரையிலுள்ள தியாகராசர் கல்லூரி, தஞ்சாவூரிலுள்ள மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அதன் பிறகு, புதுதில்லியிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளர் எனப் பணியாற்றினார். அதன் பின்னர் சென்னையிலுள்ள காந்தி ராமலிங்கர் பணி மன்றத்தின் செயலாளராகப் பணியாற்றினார். இவரது தமிழ்ப்புலமையால் ஈர்க்கப்பட்ட தமிழக முதலமைச்சர் எம்.ஜி. ஆர். இவரை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் துணை இயக்குநராகப் பணியமர்த்தினார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் தமிழறிஞர் ஔவை நடராஜன் சென்னையில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.

இந்த நிலையில், சென்னை அண்ணா நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அப்போது கவிஞர் வைரமுத்து உடனிருந்தார்.