இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழக சிறைகளில் புதிய வசதி - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

 
mk stalin

இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில், 12 மாவட்ட சிறைகளில் கட்டப்பட்டுள்ள சோதனை அடையாள அணிவகுப்பு அறைகளுக்கான கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 
 
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் குற்றம் இழைத்து சிறையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறைவாசிகளின் மீதான குற்றத்தினை சாட்சிகள் வாயிலாக நிரூபித்திடும் வகையில் காவல் துறையின் சார்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காட்டிட, மத்திய சிறைகளில், நீதித்துறை நடுவர் மற்றும் குற்றச்செயலால் பாதிக்கப்பட்டோர் ஒரு பகுதியிலும், அவர்களை குற்றவாளிகள் அடையாளம் காணாத வகையில் மற்றொரு பகுதியிலும் இருக்கும் வகையில் ஒருவழிக்கண்ணாடி தடுப்புடன் கூடிய தனி அறைகள் அனைத்து மத்திய சிறைகள் மற்றும் பெண்கள் தனிச்சிறைகளில் கட்டப்பட்டு இயங்கி வருகின்றன.  அதனைத் தொடர்ந்து, 12  மாவட்ட சிறைகளில் இத்திட்டத்தினை செயல்படுத்திட அரசாணை வெளியிடப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 


அந்த வகையில் திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டம் பேராவூரணி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், விருதுநகர், ராமநாதபுரம், சேலம் மாவட்டம் ஆத்தூர், நாகப்பட்டினம், விழுப்புரம் மாவட்டம் வேடம்பட்டு, தேனி, திருப்பூர், தருமபுரி மற்றும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் ஆகிய 12 மாவட்டச் சிறைகளில் 2.51 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சோதனை அடையாள அணிவகுப்பு அறைகளுக்கான கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இத்திட்டம் இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டின் மாவட்டச் சிறைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தலைமைச் செயலாளர் இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை இயக்குநர் அமரேஷ் புஜாரி, விசுவநாதன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.