ஏழையின் சிரிப்பில் கலைஞரை காண்கிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

 
mk stalin

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று அண்ணா சொன்னார், ஆனால் நான் ஏழையின் சிரிப்பில் கலைஞரை காண்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை கோபாலபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் 54 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணங்களை நடத்தி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வாழ்த்தியதோடு, அவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். 

mk stalin

இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: எந்த பிரச்னையாக இருந்தாலும் அதனை உடனுக்குடன் சரி செய்வது தான் நம் ஆட்சி. ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று அண்ணா சொன்னார். ஆனால் நான் ஏழையின் சிரிப்பில் கலைஞரை காண்கிறேன். எனக்கு, என் தங்கைக்கு பெயர் சூட்டியது மட்டுமல்ல, உங்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் என பெயர் சூட்டி கண்ணியத்தை கொடுத்தவர் கலைஞர்தான். அந்த வகையில் நமக்கு பெயர் சூட்டிய தந்தை கலைஞர்தான், அதனால் இது குடும்ப விழா. இலவச பஸ் பாஸ், உலக வங்கி நிதியுதவியுடன் கருவிகள், உதவித்தொகை, ஆவின் பாலகங்கள் அமைக்க முன்னுரிமை என பல திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு கொண்டு வரப்பட்டன. இவையெல்லாம் சலுகைகள் அல்ல, உங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள். மாற்று திறனாளிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு செய்து வருகிறது. மாற்றுத்திறனாளிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.