அண்ணாமலையை பார்த்து எதிர்க்கட்சிகளுக்கு பயம் - சி.டி.ரவி

 
CT Ravi

அண்ணாமலையை பார்த்து எதிர்க்கட்சிகள் பயப்படுவதாக தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்திருக்கிறார்.

சிதம்பரத்தில் நடைபெற உள்ள பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய பொதுச்செயலாளரும் , தமிழ்நாடு மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி இன்று திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார்.  அங்கு அவருக்கு பாஜகவினர் சிறப்பு வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வலிமையுடன் முன்னேறி சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஊழல் நடைபெற்று இருப்பதாக திமுக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறதே? என்கிற கேள்விக்கு பதில் அளித்த சி.டி.ரவி,  ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரம் இருந்தால் காட்டச் சொல்லுங்கள் என்றும்,   திமுக காங்கிரஸின் நோக்கம் அவர்களது குடும்பத்தை வளர்ப்பது மட்டும் தான் என்று சாடினார்.

சி.டி.ரவி

மேலும், திமுக மற்றும் காங்கிரஸ் முழு நேர வேலையை ஊழல் செய்வது மட்டும்தான் எனவும், ஆனால்  எங்களுடைய வேலை மக்களுக்கான திட்டங்களை செய்வது  என்று தெரிவித்தார்.  2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக - பாஜக கூட்டணி ஏற்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்வியை தவிர்த்த அவர்,   நாங்கள் கட்சியை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றோம் என்றும்,   ஒவ்வொரு இடத்திலும் பாஜகவை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறோம் என்று பதிலளித்தார்.  

அண்ணாமலையை பார்த்து எதிர்க்கட்சிகளுக்கு பயம் - சி.டி.ரவி

தொடர்ந்து பேசிய அவர்,  அண்ணாமலை தலைமையின் கீழ் நாங்கள் எல்லா  மக்களின் கைகளையும் பிடித்து நடந்து கொண்டிருக்கின்றோம் எனவும்,  மக்கள் சேவை மட்டும்தான் எங்களது ஒரே நோக்கம் என்றும் தெரிவித்தார்.  நாளுக்கு நாள் பாஜக தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது எனவும்,  அண்ணாமலையை பார்த்து எல்லோரும் பயப்படுவதாகவும் குறிப்பிட்டார்.  அண்ணாமலையின்  நடவடிக்கைகள் மற்றும்  செயல் திட்டங்களை பார்த்து எதிர்க்கட்சியினர் பயப்படுவதாகவும், இதன் அடிப்படையில் பாஜக தமிழகத்தில் வலுவாக இருக்கிறது என்றும் கூறினார்.