#Breaking: நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உத்தரவு - உச்சநீதிமன்ற அதிரடி..
நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்று வந்தவர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் யஸ் ஆகிய 7 பேரும். இவர்களில் பேரறிவாளனை , கடந்த மே மாதம் 18ஆம் தேதி உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தது. பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மீதமுள்ள ஆறு பேரும் விடுதலை கோர சட்ட வழிவகை ஏற்பட்டது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் நளினி மற்றும் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரும் தங்களை விடுதலை செய்யக்கோரி தனித்தனியே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதில் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட காரணங்களை மேற்கோள்காட்டி தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த வழக்கை கடந்த 3 மாதங்களாக நீதிபதி டி.ஆர்.கவாய் , நாகரத்னா அமர்வு விசாரித்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகிய ஆறு பேரையும் விடுதலை செய்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி முதல் நளினி பரோலில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தமிழக அரசு இந்த விவகாரத்தில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்ய 2 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அதற்கு ஒப்புதல் அளிக்காமல், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் கால தாமதம் செய்து வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மத்திய அரசிடமும் நீதிமன்றம் கருத்து கேட்டது. ஆனால் இவர்களது விடுதலைக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
அதே நேரம் தமிழ்நாடு அரசு பொருத்தவரை ஏற்கனவே பேரறிவாளனுக்கு எடுத்த முடிவை உச்சநீதிமன்றம் எடுத்தாலோ? அல்லது உச்ச நீதிமன்றம் எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அதற்கு கட்டுப்படுவோம் என பதில் மனு தாக்கல் செய்திருந்தது. மேலும், ஆறு பேர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நீதிமன்றத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது போல் இவர்கள் ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று பேரறிவாளனே ஏற்கனவே விடுதலை செய்தது போல ஆறு பேரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை ஏனைய ஆறு பேருக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசியல் சட்டத்தின் 161 வது பிரிவை பயன்படுத்தி 7 பேரையும் விடுவிக்க தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.