#Breaking : அதிமுக பொதுக்குழு தொடர்பான ஓபிஎஸ் வழக்கு : விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி..

அதிமுக விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகியிருக்கிறார்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ .பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளரான அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. சட்டப்படி பொதுக்குழுவினை நடத்திக் கொள்ளலாம். விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என்று உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம்- வைரமுத்து ஆகிய இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர் . இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும். அதுவும் வழக்கை இரண்டு வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டது.
இதை அடுத்து இந்த வழக்குகளை நேற்று முதல் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிப்பதாக இருக்கிறது. இந்த நிலையில் வைரமுத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில், அதிமுக பொதுக்குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது. அவருக்கு பதிலாக வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். கண்டனம் தெரிவிக்கும் விதமாக வழக்கிற்கு சம்மந்தமில்லாத கருத்துகளை தெரிவித்ததாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை தலைமை நீதிபதி நிராகரித்தார்.
இதனையடுத்து தற்போது நீதிபதியை மாற்றக் கோரி ஓபிஎஸ் தலைமை நீதிபதியிடம் முறையிட்டது, நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல், கீழ்த்தரமான செயல் என தனிநீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கண்டனம் தெரிவித்தார். அதிமுக பொதுக்குழு வழக்கை நானே விசாரிப்பேன் எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இந்த வழக்கு இன்று பிற்பகல் 2.15க்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் ஓபிஎஸ் தரப்பில் மன்னிப்புக் கோரப்பட்டது. நடந்தது நடந்ததாக இருக்கட்டும் ; திறந்த மனதோடு வழக்கு நடத்துங்கள் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. பின்னர் நீதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், தலைமை நீதிபதியிடம் அளிக்கப்பட்ட கடிதத்தை ஓபிஎஸ் தரப்பு திரும்பப் பெற்றது.
மனுவை திரும்பப் பெற்றதையும், மன்னிப்புக் கோரியதையும் அறிக்கையாக அளித்ததும், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை மீண்டும் தலைமை நீதிபதிக்கே அனுப்புவதாகவும், அவரே யார் விசாரிக்கட்டும் என முடிவெடுப்பார் என்றும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கூறினார். இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவதா இல்லையா என தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என்று கூறிய அவர், அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையில் இருந்து விலகினார்.