சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவன் கொலை- அதிகாரி உள்ளிட்ட 6 பேர் கைது

 
சீர்திருத்த பள்ளி

செங்கல்பட்டு அருகே சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவன் மர்ம மரணமடைந்த விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

death


செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருக்கு  நிர்மலா என்ற மனைவியும் 3-மகன்களும், 3-மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகனான கோகுல்ஸ்ரீ (17) என்பவர் கடந்த மாதம் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்வே துறைக்கு சொந்தமான பேட்டரி ஒன்றை திருடிய வழக்கில் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் கடந்த 29ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில்  ஒப்படைக்கப்பட்டார். மறுநாளே திடீரென கோகுல்ஶ்ரீக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இந்நிலையில் கோகுலின் இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது தாய் நிர்மலா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்த கோகுல் ஸ்ரீயின் உடலை செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரீனா முன்னிலையில் வீடியோ பதிவுடன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கோகுலின் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வந்த நிலையில், பிரேத பரிசோதனையில் சிறுவன் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து இது கொலை வழக்காக மாற்றப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியை சேர்ந்த தஞ்சை மாவட்டம் ஜான் கென்னடி என்பவரது மகன் ஆனஸ்ட்ராஜ் (29), செங்கல்பட்டை சேர்ந்த முருகன் மகன் சரண்ராஜ்(39), டில்லி மகன் விஜயகுமார்(30) பிரகாசம் மகன் வித்யாசாகர்(33), சம்பத் மகன் மோகன் (30)ராமலிங்கம் மகன் சந்திரபாபு( 39) உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.