கோவில்களில் முதல் மரியாதை அளிக்க தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 
tiruchendur murugan temple

கோவிலினுள் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பது, குடை பிடிப்பது உள்ளிட்டவற்றை செய்ய கூடாது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

karamadai temple fest

சிவகங்கையைச் சேர்ந்த பாலசுந்தரம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா மல்லாகோட்டை கிராமத்தில் சன்டி வீரன்சுவாமி கோவில் மற்றும் பெரியகோட்டை முத்தையனார் கோவில் பிரசித்தி பெற்றவை. ஒவ்வொரு ஆண்டும் தை திருவிழா  மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த விழாவின்போது யாருக்கும் முதல் மரியாதையோ அல்லது கோவில் நிர்வாகம் தரப்பில் சிறப்பு மரியாதைகளோ செய்யப்படாது. 

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சசிபாண்டிதுரை என்பவர் அவருக்கு முதல் மரியாதை செய்யுமாறும், சிறப்பு மரியாதை செய்யுமாறு கூறி வருகிறார். விழாவின் பொழுது அவருக்கு தலப்பா கட்டி  கையில் குடையை ஏந்தியவாறு அவரது ஆட்களுடன்  ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார். பல்வேறு சமூகத்தினரும் ஒன்றாக இணைந்து கொண்டாடும் இவ்விழாவில், அவருக்கு மட்டும் சிறப்பு மரியாதை வழங்குமாறு கோவில் பூசாரிகளை வற்புறுத்தி வருகிறார். இது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே சிங்கம்புணரி மல்லா கோட்டை கிராமத்தில் நடைபெறும் தைப்பொங்கல் விழா கொண்டாட்டத்தின் போது, அவரது ஆட்களுடன் பரிவட்டம் கட்டி, கையில் கோலுடன், குடை பிடித்து ஊர்வலத்தில் கலந்து கொள்ள தடை விதிப்பதோடு, யாருக்கும் எந்த முதல் மரியாதையும் சிறப்பு மரியாதையும் செய்யக்கூடாது. அவ்வாறு கலந்து கொண்டால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

madurai high court

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "இது போன்ற வழக்குகள் இந்த நீதிமன்றத்திற்கு புதிது அல்ல. ஏற்கனவே கடந்த ஆண்டு இதே போன்ற வழக்குகள் விசாரணைக்கு வந்த போது  உயர்நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை இந்த நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கோவிலினுள் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை, குடை பிடிப்பது அல்லது வேறு ஏதேனும் அடையாளங்களால் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை உயர்த்துவது போன்ற செயல்களிலோ ஈடுபடக் கூடாது. அனைத்து பக்தர்களும், கிராம மக்களும் சமமாகவும், சம மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும்.

கோவிலுக்குள் அனைவரும் சமமானவர்களே என அந்த உத்தரவுகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவுகள் இந்த வழக்குக்கும் பொருந்தும். இந்த வழக்கிலும் தங்களது அந்தஸ்தை சிறப்பாக கொள்ளும் காட்டிக்கொள்ளும் வகையிலான அடையாளங்கள் இருக்கக் கூடாது. சிறப்பு மரியாதை வழங்குமாறு வற்புறுத்தவும் கூடாது. விழாவை அமைதியான முறையில் நடத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.