தசரா விழாவில் ஆடலும், பாடலும் நிகழ்ச்சிக்கு தடை.. - ஹைகோர்ட் கிளை உத்தரவு..

 
ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தடை


குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த  உயர்நிதிமன்ற மதுரைக்கிளை   இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற நிகழ்ச்சி  குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா.  தொடர்ந்து  10 நாட்கள் வெகுவிமர்சியாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த  பட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர். இந்நிலையில், திருச்செந்தூரைச் சேந்த  வழக்கறிஞர் ராம்குமார் என்பவர் தசரா நிகழ்ச்சியில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி  உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  மனு தாக்கல் செய்திருந்தார்.

குலசேகரபட்டிணம்
அவர் தாக்கல் செய்த மனுவில், “தசரா திருவிழாவில் இரவு நேரங்களில் ஆடல், பாடல், கலைநிகழ்ச்சிகள் என்ற பெயரில் மும்பை பார் நடன மங்கையர், சினிமா துணை நடிகைகள், நாடக நடிகைகளை அழைத்து வந்து ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாகவும்,  அரை குறை ஆடைகளுடன் நடன நிகழ்ச்சி நடத்துவதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும்” என்றும்  கோரிக்கை விடுத்தார். இந்த மனு இன்று  நீதிபதி மகாதேவன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,  வாதிட்ட மனுதாரர் தரப்பு  ,  ஆபாச நடனங்களுக்கு உயர்நீதிமன்றம் ஏற்கனவே விதித்த தடையை அமல்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.  அத்துடன்  ஆண், பெண் சேர்ந்து ஆடும் ஆபாச நடன வீடியோவை  மனுதாரர் தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.  

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

மனுதாரர் தரப்பு வாதங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதி,   குலசை தசரா விழாவில் சினிமா பாடல்களுக்கு ஆடவும், சினிமா பாடல்களை பாடவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.  அத்துடன்  பக்திப்பாடல்கள் அல்லாத பிற பாடல்கள் ஒலிபரப்பப்படாமல் இருப்பதை  தூத்துக்குடி எஸ்.பி., மற்றும்   ஆட்சியர் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.  கோயில் திருவிழாக்களில் கலைநிகழ்ச்சிகள் என்னும் பெயரில் ஆபாச நடனம் ஆடுவதையும், ஆபாச பாடல் இசைப்பதையும் அனுமதிக்க முடியாது என்று காட்டமாக தெரிவித்த நீதிபதி,   கோயில்களில் ஆடல், பாடல் நடத்துவது குறித்து விரிவான வழிகாட்டு உத்தரவும் பிறப்பிக்கப்படும்  என்றும் தெரிவித்தார்.