வானவெடிகள் வெடிக்க தடை, புகை வர தடை -பிரதமர் மோடி வருகையால் மதுரை பரபரப்பு
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தை சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபட்டுள்ளனர். மதுரை விமான நிலையத்தை சுற்றி ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மதுரை சுற்று வட்டார கிராமங்களில் வானவெடிகள் வெடிக்கவும், புகை எரியவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் நாளை 36 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி, தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்கின்றார்கள். விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வருகிறார்.
இதை அடுத்து மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் நான்கு துணை ஆணையர்களின் மேற்பார்வையில் 1500 க்கும் மேற்பட்ட போலீசார் மதுரை விமான நிலையத்தை சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாநகர் மற்றும் விமான நிலையம் பாதுகாப்பு மண்டலமாக மாறி இருக்கிறது. இதனால் ட்ரோன் கேமராக்கள் பறக்க முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. மதுரை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அவர்களது வாகனங்கள் முழு சோதனைக்கு பின்னரே விமான நிலையத்திற்கு அனுமதிக்கப்படுகின்றன.
விமான நிலையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் வானவெடிகள் வெடிக்க வேண்டாம் என்றும், புகைகள் வருமாறு எதையும் எரிக்க வேண்டாம் என்றும், தேவையற்ற நபர்கள் யாரேனும் தென்பட்டால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மதுரை மாநகர் காவல்துறை கேட்டுக் கொண்டிருக்கிறது.