எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வலுவடைந்து வருகிறது- சி.டி.ரவி பேட்டி

 
CT Ravi

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை பாஜகவின் வளர்ச்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது எனவும்,  எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வலுவடைந்து வருவதாக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சி.டி.ரவி கூறியதாவது:  அ.தி.மு.க.வில் தற்போது உள்கட்சி பிரச்சினை உள்ளது. கடந்த 2021 வரை அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராகவும், ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சராகவும் அதிகாரம் மிகுந்த இரண்டாவது தலைவராகவும் இருந்தார். தொடர்ந்து அதிமுகவை யார் தலைமை தாங்கி வழி நடத்தினாலும் அவர்களுடன் பாஜக நட்பு தொடரும்.  கடந்த 50 ஆண்டுகளாக இரண்டு திராவிட கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. தற்போது பாஜக தமிழின் பெருமை, வளர்ச்சி திட்டங்கள் ஆகியவற்றை முன்னெடுத்து வருகிறது. இதை தமிழக மக்கள் விரும்புகிறார்கள். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை பாஜகவின் வளர்ச்சிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. 

தொடர்ந்து பேசிய அவர், அ.தி.மு.க.வுக்குள் ஏற்பட்டுள்ள மோதலால் தி.மு.க. பலமடையும். பா.ஜனதாவுக்கு ஆளும் தி.மு.க. அரசை எதிர்த்து அரசியல் செய்ய ஒரு வாய்ப்பை கொடுத்து இருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி வலுவடைந்து வருவதாகவும் கருத்துக்கள் நிலவுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை பா.ஜனதாவின் செயல்பாடுகளால் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இருக்கும். இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.