அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய குழு அமைக்க உத்தரவு..

 
madurai high court

அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய குழு அமைத்து அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்றும்,  தீர்வு கிடைக்காவிட்டால் மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டுடை  நடத்தலாம் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த முனியசாமி, கல்யாணசுந்தரம் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை  தாக்கல் செய்திருந்தனர். அதில், “மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் தை மாதம் முதல் நாள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் ஜனவரி 15ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. அவனியாபுரம் அம்பேத்கர் நகர் பகுதியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த 1000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பிற சமூகத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர்.

Jallikattu

2022ம் ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நீதிமன்றம் உத்தரவுப்படி அனைத்து சமூகத்தினரையும் இணைத்து குழு அமைத்து நடைபெற்றது. 2023ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் நடத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டியில் பட்டியல் சமூக மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். எனவே 2022ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது போல, அனைத்து சமூகத்தினரையும் இணைத்து குழு அமைத்து இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டனர்.  இந்த வழக்கானது உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

court

அப்போது, அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து நாளை சமாதான கூட்டம் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.  இந்தக் கூட்டத்தில் தீர்வு எட்டினால் அவனியாபுரம் அனைத்து சமுதாய மக்களை உள்ளடக்கிய குழு அமைத்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம் என்றும்,  தீர்வு கிடைக்கவில்லை என்றால் ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குனர் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம் என்றும்  தெரிவிக்கப்பட்டது. மேலும்  ஏதேனும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.