சுரானா நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.113.32 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

சென்னையைச் சேர்ந்த சுரானா நிறுவனத்துக்குச் சொந்தமான 67 காற்றாலை உட்பட ரூ.113.32 கோடி மதிப்புடைய 75 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட்' நிறுவனம், 'சுரானா பவர் லிமிடெட்' மற்றும் 'சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட்' ஆகியவை, ஐ.டி.பி.ஐ, எஸ்.பி.ஐ வங்கியிடமிருந்து கடன் பெற்று மோசடி செய்ததன் மூலம், 3,986 கோடி ரூபாய் இழப்பு என சிபிஐயில் புகார் அளிக்கப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில்
ஈடுபட்டதாக, அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா மற்றும் நிறுவன ஊழியர்கள் ஆனந்த், பிரபாகரன் ஆகிய 4 பேரை கடந்த மாதம் 12 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் சுரானா நிறுவனத்துக்குச் சொந்தமான 67 காற்றாலை உட்பட 113.32 கோடி மதிப்புடைய 75 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். ஏற்கனவே கடந்த 2012-ஆம் ஆண்டு சட்ட விரோத தங்க ஏற்றுமதி விவகாரத்தில் சி.பி.ஐ நடத்திய 400 கிலோ தங்கம் சிக்கிய நிலையில், சி.பி.ஐ கட்டுப்பாட்டில் சீலிடப்பட்டு வைக்கப்பட்டிருந்த அந்த தங்கத்தில் 103 கிலோ தங்கம் மாயமானது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி பின்னர் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதேபோல 250 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி மோசடி வழக்கிலும் சுரானா நிறுவனம் சிக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.