அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணைக்கு தடை கோரிய வழக்கு முடித்து வைப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது. விசாரணை முடித்து விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்து விட்டதால் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது மதுரை உயர்நீதிமன்ற கிளை.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது தமிழக அரசு. இந்த ஆணையத்தை அமைத்து அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த அர்ஜுனன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2018 ஆம் வருடம் மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், விசாரணை ஆணையம் முறைப்படி அமைக்கவில்லை. ஆணையம் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நேரடி சாட்சிகளை மட்டுமே விசாரணைக்கு அழைத்து இருக்கிறது. இந்த ஆணையும் மே 22ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தை மட்டுமே விசாரிப்பதாக தெரிவித்திருக்கிறது. மே 23, 24 ஆகிய இரண்டு நாட்களும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்படுவதாக ஆணையம் தெரிவிக்கவில்லை .
அதனால் விசாரணை ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையும் விசாரணையை முடித்து தமிழ்நாடு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்து விட்டது என்று தெரிவிக்கப்பட்டது . இதை அடுத்து நீதிபதிகள் இந்த வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டு உள்ளனர்.