4 பேர் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளாக நியமனம் -ஓபிஎஸ் அறிவிப்பு
வெல்ல மண்டி நடராஜன் உள்பட நாலு பேர் அதிமுக தலைமை கழக நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று ஓ .பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் கட்சியின் கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாக சொல்லி அதிமுக எம்பி ஓ. பி. ரவீந்திரநாத், ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் , முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உட்பட 18 பேரை அதிமுகவிலிருந்து கூண்டோடு நீக்கம் செய்து உத்தரவிட்டார் எடப்பாடி.
இந்த அறிவிப்புக்கு பதிலடியாக எடப்பாடி பழனிச்சாமி உட்பட அவரது ஆதரவாளர்கள் 22 பேரை அதிமுகவிலிருந்து நீக்கம் செய்து அறிவித்தார் ஓபிஎஸ். எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் இப்படி மாறி மாறி அதிமுகவிலிருந்து நீக்கம் என்று அறிவித்து வருகின்றனர். அதே சமயம் ஓபிஎஸ் புதிய நிர்வாகிகளையும் அறிவித்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமியும் புதிய நிர்வாகிகளாக அதிமுகவில் அறிவிப்பை செய்து வருகிறார்.
இப்படி போட்டி அதிமுகவில் தற்போது அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கத்தையும் , துணை ஒருங்கிணைப்பாளராக ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரை நியமனம் செய்து உத்தரவிட்டார் ஓபிஎஸ். இதை அடுத்து வெல்லமண்டி நடராஜன் உள்பட நான்கு பேரை அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகளாக நியமித்திருக்கிறார் ஓபிஎஸ்.
வெல்லமண்டி நடராஜன் கழக அமைப்புச் செயலாளர் என்றும், ஆர். டி .ராமச்சந்திரன் கழக புரட்சித்தலைவி பேரவை செயலாளர் என்றும், சி. திருமாறன் கழக வழக்கறிஞர் பிரிவு தலைவர் என்றும், ஆர்.வி. பாபு கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் என்றும் நியமனம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.