முன்னாள் அதிமுக எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி ஆய்வு

 
mla

நாமக்கல் முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.பி.பி பாஸ்கர் வீட்டில் சொத்து மதிப்பீடு பணியில்  லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், வருவாய் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அதிரடி ரெய்டு

நாமக்கல் சட்டசபை தொகுதியில் 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்தவர் பாஸ்கர், இவர் நகர அதிமுக செயலாளராகவும் இருந்து வருகிறார். பாஸ்கருக்கு சொந்தமான வீடு மோகனூர் ரோட்டில்,  கே.கே.நகரில் உள்ளது.  பாஸ்கர் தற்போது லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்தி  வருகிறார். பாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளதாகவும், இந்த வருமானம் அவர்களது சட்டப்படியான வருமானத்தை விட 315 சதவீதம் அதிகம் எனவும் புகார் எழுந்தது . 

இதனையடுத்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து போலீசார் கடந்த 12-8-2022 அன்று. பாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்கள்  மற்றும் மதுரை, திருப்பூர் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளிட்ட மொத்தம் 26 இடங்களில் (நாமக்கல்-24, மதுரை-1, திருப்பூர்-1) லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஏராளமான ஆவணங்கள் கணக்கில் வராத லட்சக்கணக்கான ரொக்க பணம் மற்றும் 3 சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் இன்று (18-1-2023) முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.பி.பி பாஸ்கர் வீட்டிற்கு வந்த நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் அவரது சொத்து மதிப்பீடு பணியில் ஈடுபட்டுள்ளனர். கே.பி.பி பாஸ்கர் மற்றும் அவரது மனைவி உமா ஆகியோரிடம் சொத்துக்கள் குறித்தும் ஆவணங்கள் குறித்தும் கேட்டு வருகின்றனர்.