செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தை வைத்து ஆவினில் மற்றொரு முறைகேடு?

 
ஆவின்

சர்வதேச சதுரங்கப் போட்டியை வைத்து ஆவினில் மற்றொரு முறைகேடு அம்பலமாகியுள்ளதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவின் பால் பாக்கெட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரம் அச்சிடப்பட்ட பாலிதீன் கவர் கொள்முதல் செய்ய டெண்டர் விடாமலும், ஏற்கனவே பாலிதீன் கவர் கொள்முதல் செய்து வரும் நிறுவனத்தில் கொள்முதல் செய்யாமலும், ஏற்கனவே அந்த நிறுவனத்திடம் கொள்முதல் செய்து வரும் விலையை விட ஒரு கிலோவிற்கு 30.00ரூபாய் வரை அதிக விலை கொடுத்து குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திடம் செய்ய ஆர்டர் கொடுத்த வகையில் ஆவினில் சுமார் 1கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடைபெற்றிருப்பதாக வரும் தகவல் கடும் அதிர்ச்சியளிக்கிறது.

ஆவின் பால் பாக்கெட்டில் அளவை குறைத்து விநியோகம் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவலில் இருந்து மக்கள் மீள்வதற்குள் சர்வதேச சதுரங்கப் போட்டியை வைத்து முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கூடுதல் அதிர்ச்சியளிக்கிறது.

எனவே ஆவின் பால் பாக்கெட்டில்  செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தை அச்சிட டெண்டர் விடாமல் ஆர்டர் கொடுக்க ஆவின் அதிகாரிகளை தூண்டியது யார்..?, மொத்தம் எத்தனை டன் பாலிதீன் கவர் கொள்முதல் செய்யப்பட்டது..?, அதனால் ஆவினுக்கு எவ்வளவு ரூபாய் இழப்பு..? என்பது தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுவதோடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்து மோசடி செய்த தொகையை அவர்களிடம் இருந்து வசூலித்து ஆவின் கணக்கில் வரவு வைக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.