"திமுக கொடுத்ததை ஆளுநர் அப்படியே வாசித்துள்ளார்" அண்ணாமலை பேட்டி

 
Annamalai

திமுக கொடுத்ததை ஆளுநர் அப்படியே வாசித்துள்ளார், ஆளுநர் எந்த இடத்திலும் தனது சொந்த கருத்தை திணித்து பேசவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

திண்டுக்கல் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1229 ஒன்றியங்களில் “நம்ம ஊர் மோடி பொங்கல் விழா” கொண்டாடப்படுகிறது. மதுரை கிழக்கு மாவட்டம் சார்பில், உத்தங்குடி பரசுராமன்பட்டி ஒன்றியத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. பாஜக நிர்வாகிகள் பொதுமக்களுடன் இணைந்து நம்ம ஊர் மோடி பொங்கலை வைத்துக்கொண்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்காக பாஜக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவருகிறது. தமிழகமும், தமிழ்நாடும் ஒன்றுதான். தமிழக கலாச்சாரத்தை ஆளுநர் முழுமையாக அறிந்துள்ளார். சட்டப்பேரவையில்கூட ஆளுநர் தமிழில்தான் பேசினார். தமிழகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. திமுக அரசு கொடுத்ததை ஆளுநர் படிக்க வேண்டும் என்பது மரபு. அதன்படி திமுக கொடுத்ததை ஆளுநர் அப்படியே வாசித்துள்ளார், பல இடங்களில் ஆளுநர் திமுக அரசை பாராட்டி பேசியுள்ளார். ஆளுநர் எந்த இடத்திலும் தனது சொந்த கருத்தை திணித்து பேசவில்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் மத்திய அரசு எனக் கூறியுள்ளார். மாறாக உரையில் சில விஷயங்களை ஆளுநர் தவிர்த்துள்ளார், காரணம் அது பொய். ஆளுநரை பேரவையில் வைத்துக்கொண்டு அவரது முன்னிலையில் முதலமைச்சர் பேசுவது அவமரியாதை செய்வதற்கு சமம்.

ஒரு வண்டிக்கு 2 சக்கரங்கள் போல மாநில அரசும், மத்திய அரசும் உள்ளது. இரு சக்கரங்களும் மிதமாக ஒரே நேர்க்கோட்டில் செல்லவேண்டும். அதுபோல் மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக செல்ல வேண்டும். ஒன்றிய அரசு என்பது தவறான சொல். இதில் முழுமையான பிணைப்பு இல்லை” எனக் கூறினார்.