வித்தியாசமாக பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் அண்ணாமலை - அமைச்சர் சேகர் பாபு
இனி வரும் காலங்களில் ஆய்வுக்கு பின்பே திருவிழாக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவின் ஆன்மீகம் மற்றும் ஆலயமேம்பாட்டு பிரிவு சார்பில் தமிழக அரசின் இந்து விரோதப் போக்கை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை, “கோயில்களை நிர்வாகிக்க இந்து சமய அறநிலையத்துறை என்பது தேவை இல்லாத ஒன்று. சென்னையில் பிரதான இடத்தில் கோவில் சொத்து 1 ரூபாய் மட்டுமே சதுரடிக்கு வசூலிக்கப்படுகின்றது கோவில் மூலமாக 1600 கோடி ரூபாய் பணம் இந்துசமய அறநிலையத்துறைக்கு ஆண்டுதோறும் வருகின்றது இந்து கோயிலில் மட்டும் அதிகாரிகளிடம் எண்ணெய் வாங்க கூட அவர்களின் அனுமதி கேட்க வேண்டியுள்ள கேவல நிலை உள்ளது. இந்து சமய அறநிலை துறை அமைச்சரிடம் இந்த துறையை எப்படி நடத்த வேண்டும் என்று யோசனை சொல்ல தயாராக உள்ளோம், விவாதம் நடத்த தயாராக உள்ளோம்"என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, " சர்ச்சைகள் வந்தால் தான் அரசு சிறப்பாக செயல்படுவதாக அர்த்தம். சர்ச்சைகள் இல்லை எனில் அரசு முடங்கி கிடப்பதாக அர்த்தம் . நாள்தோறும் வித்தியாசமாக பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் அண்ணாமலை. நெமிலியில் கிரேன் விழுந்த விபத்து எதிர்பாராமல் நடந்தது. ஆய்வுகளுக்கு பின்வே திருவிழாக்களுக்கு இனி அனுமதி வழங்கப்படும். வருங்காலங்களில் இது போன்ற விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.