மூலதன மானியத் திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை குறைப்பு - அன்புமணி அறிக்கை

 
anbumani

மூலதன மானியத் திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணம் பற்றி மத்திய, மாநில அரசுகள் விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறு மற்றும் குறு உழவர்கள் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்களை வாங்குவதற்காக ஆண்டுக்கு 3 முறை தலா ரூ.2,000 வீதம் ரூ.6,000 வழங்கும் திட்டம் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. முதல் தவணை நிதி வழங்கப்படும் போது 11.84 கோடியாக இருந்த பயனாளிகள் எண்ணிக்கை கடந்த மே,ஜுன் மாதங்களில் 11-வது தவணை நிதி வழங்கப்பட்ட போது பயனாளிகளின் எண்ணிக்கை 3.87 கோடியாக, அதாவது மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டது. தமிழ்நாட்டில் இது 46.80 லட்சத்தில் இருந்து 23.04 லட்சமாக குறைந்து விட்டது. எனவே, மூலதன மானியத் திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணம் பற்றி மத்திய, மாநில அரசுகள் விசாரணை நடத்த வேண்டும். விசாரணையில் தெரியவரும் காரணங்களை சரி செய்து தகுதியுள்ள அனைத்து உழவர்களுக்கும் மூலதன மானியம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.