என்.எல்.சி நிறுவனம் உடனடியாக வெளியேற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்..

 
anbumani

தமிழகத்தில் இருந்து  என்எல்சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்ட கத்தாழை, கரிவெட்டி, மும்முடி சோழன் உள்ளிட்ட கிராமங்களில் என்எல்சி நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களை பார்வையிடுவதற்காக வந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் என்.எல்.சி அதிகாரிகளை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு திருப்பி அனுப்பியுள்ளனர். என்.எல்.சிக்கு கடந்த காலங்களில் நிலம் கொடுத்த மக்கள் அனுபவிக்கும் வேதனை, நிலத்தை இழக்க இருப்பவர்களின் அச்சம் ஆகியவற்றின் வெளிப்பாடு தான் இந்த எதிர்ப்பு ஆகும்.

கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களை பார்வையிடுவதற்காக சென்ற மாவட்ட ஆட்சியரும், என்.எல்.சி அதிகாரிகளும் கத்தாழை, கரிவெட்டி கிராம மக்களால் திருப்பி அனுப்பப்படுவது இது முதல் முறையல்ல... மூன்றாவது முறையாகும். கடந்த காலங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கத் தவறியதையும், வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி ஏமாற்றியதையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் எதிர்ப்பை இந்த வகையில் வெளிப்படுத்துகின்றனர்.

 என்.எல்.சி நிறுவனம் உடனடியாக வெளியேற வேண்டும்  - அன்புமணி ராமதாஸ்..

ஏற்கெனவே நிலம் கொடுத்த மக்களுக்கு உரிய இழப்பீடும், வேலையும் வழங்க வேண்டும் என்று கோரும் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக பாட்டாளி மக்கள் கட்சி திகழ்கிறது; மக்களின் கோரிக்கைகளுக்காக போராடி வருகிறது. நிலம் கொடுத்த மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற என்.எல்.சி முன்வர வேண்டும்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், அதன் வளர்ச்சிக்கு காரணமான மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்கு மாற்றாக அவர்களை சுரண்டி வருவதை மக்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. மூன்றாவது சுரங்கத்திற்காக அடிமாட்டு விலைக்கு வாங்கத் துடிக்கும் என்.எல்.சி நிறுவனம், நிலங்களை வழங்கிய மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்குக் கூட தயாராக இல்லை. அதனால் தான் என்.எல்.சி சுரங்கம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த கடலூர் மாவட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 என்.எல்.சி நிறுவனம் உடனடியாக வெளியேற வேண்டும்  - அன்புமணி ராமதாஸ்..

என்.எல்.சி நிறுவனம் 60 ஆண்டுகளுக்கு முன் மிகச்சிறிய நிறுவனமாகத் தான் தொடங்கப்பட்டது. ஆனால், இந்தியாவின் நவரத்னா நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. ஆண்டுக்கு ரூ.11,000 கோடி வருவாய் ஈட்டும் என்.எல்.சி நிறுவனம், சராசரியாக ரூ.2000 கோடி லாபம் ஈட்டுகிறது. அறத்தின்படி பார்த்தால், என்.எல்.சி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு காரணமான நிலக்கரி நிறைந்த நிலங்களை வழங்கிய மக்களுக்கு, அதன் லாபத்தில் ஒரு பகுதி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஆனால், அதை செய்யத் தவறிய என்.எல்.சி, தமிழகத்திலிருந்து கிடைக்கும் லாபத்தை வட மாநிலங்களில் முதலீடு செய்கிறது.

என்.எல்.சி நிறுவனத்திற்காக இதுவரை 37,256 ஏக்கர் நிலம் கொடுத்த சுமார் 25,000 குடும்பங்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்படவில்லை; அதுமட்டுமின்றி, 25,000 குடும்பங்களில் 1827 பேருக்கு மட்டும் தான் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்களும் ஓய்வு பெற்று விட்ட நிலையில், இப்போது ஒப்பந்தத் தொழிலாளர்களாக மட்டும் 3500 பேர் பணியாற்றுகின்றனர். அண்மையில் நியமிக்கப்பட்ட 299 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை. நிலம் கொடுத்த மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க என்எல்சி நிறுவனம் மறுக்கிறது. இது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்.

  என்.எல்.சி நிறுவனம் உடனடியாக வெளியேற வேண்டும்  - அன்புமணி ராமதாஸ்..

என்.எல்.சி நிறுவனத்தால் கடலூர் மாவட்டத்திற்கு எந்த நன்மையும் இல்லை. ஒருபுறம் மக்களை சுரண்டும் என்.எல்.சி நிறுவனம், இன்னொரு புறம் கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலை சீரழித்து பாலைவனமாக்குகிறது. 40 ஆண்டுகளுக்கு முன் 8 அடி ஆழத்தில் சுவையான குடிநீர் கிடைத்தது; ஆனால், ராட்சத குழாய்களை அமைத்து நிலத்தடி நீரை என்.எல்.சி நிறுவனம் வெளியேற்றி வருவதால் நிலத்தடி நீர் மட்டம் 1000 அடிக்கும் கீழே சென்று விட்டது. என்.எல்.சி நிறுவனத்தால் பழுப்பு நிலக்கரி மற்றும் பிற தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட மோசமான விளைவுகளை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்ட பகுதியாக கடலூர் மாவட்ட தாது அறக்கட்டளையால் அடையாளம் கண்டு அறிவிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

கடலூர் மாவட்டத்திற்கு இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்திய என்.எல்.சி நிறுவனம் இனியும் அங்கு செயல்படத் தேவையில்லை. கடலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.'' என்று தெரிவித்துள்ளார்.