சாரண, சாரணியர் அமைப்பின் தலைவராக அன்பில் மகேஷ் போட்டியின்றி தேர்வு..
தமிழ்நாடு சாரண, சாரணியர் அமைப்பின் தலைவராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய சாரண, சாரணியர் இயக்கத்தின் தலைமையகம் சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ளது. இந்த சாரணர் இயக்கத்தில், பள்ளியில் படிக்கும் போதே கீழ்ப்படிதல், ராணுவம் போன்ற பயிற்சி உள்ளிட்ட பல்வேறு நற்பண்புகள் மற்றும் திறன்களை வளர்க்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகள் தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். அதன்படி சாரண, சாரணிய இயக்கத்தின் 16வது தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தலைவராக அமைச்சர் அன்பில் மகேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் இந்த சாரண, சாரணியர் இயக்க தலைவர்களாக பதவி வகித்துள்ளனர். தற்போது சாரண, சாரணிய இயக்க மாநில முதன்மை ஆணையராக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமாரும், இயக்க மாநில தலைவராக அன்பில் மகேஷும் ம் போட்டியின்றி தேர்வாகியிருக்கின்றனர். மேலும் தமிழ்நாடு சாரண சாரணியர் இயக்கத்தின் துணைத்தலைவர்களாக 6 ஆண்களும், 6 பெண்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த முறை இந்த தேர்தலில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா போட்டியிட்டு 52 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
.