சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு செல்ல அனுமதி

 
sathuragiri

ஸ்ரீவில்லிபுத்தூர்  சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் தை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது. 

sathuragiri

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் மற்றும் அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தை பிரதோஷம், தை அமாவாசையை முன்னிட்டு இன்று (18.01.23) முதல் வரும் 22ம் தேதி வரை பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மிகவும் முக்கிய விசேஷ நாளான தை அமாவாசைக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்ஓடை பகுதிகளில் வனத்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறையினர் பக்தர்களின் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தப்படவுள்ளனர்.மேலும் பக்தர்கள் நீரோடி பகுதிகளில் இறங்கி குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தாணிப்பாறை அடிவாரப் பகுதிகளிலும் கோவில் வளாக பகுதிகளிலும் பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், பக்தர்கள் செல்லும் மலைப்பாதைகளில் ஐந்து இடங்களில் குடிநீர் தொட்டி வசதிகளும் கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். 

பக்தர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் கோவில் அடிவாரம் பகுதிகளிலும் கோவில் வளாக பகுதிகளிலும் மருத்துவத் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கோயிலுக்கு வருவதற்காக போக்குவரத்து கழகம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட  இருந்து போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டுள்ளது. 10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளும் 60 வயதிற்கு மேல் உள்ள முதியவர்களும் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டுமெனவும், கொரோனா நோய் தொற்று காரணமாக பக்தர்கள் உடல் வெப்ப பரிசோதனை, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மலைப்பாதை வழியாக கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.