ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி.. ஆனால்... - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை..

 
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு  கடும்  கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்து  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 மதுரை, மணப்பாறை, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து  கோயில் திருவிழாக்களில் இரவு நேரங்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி, ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தையும் ஒன்றாக இன்று நீதிபதி சக்திகுமார் சுகுமார குரூப், விசாரணை செய்தது.  அத்துடன் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்து அனுமதி அளித்து  உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி,

கோயில் திருவிழாக்களில் நடனம்

“கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும்.

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் நாகரிகமான உடை அணிந்து இருக்க வேண்டும்.

 இரட்டை அர்த்த பாடல்கள் இடம்பெறக்கூடாது.

 எந்தஒரு அரசியல் கட்சி, மதம், சமூகம், சாதியை குறிப்பிடும் விதத்தில் பாடல்கள் இடம் பெறக்கூடாது.

 ஆடல், பாடல் நிகழ்ச்சியில் அரசியல் கட்சி அல்லது மதத்துக்கு ஆதரவாகவோ, எதிராகவோ ஃபிளக்ஸ் போர்டுகள் வைக்க கூடாது.

 ஆடல், பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா, மதுபானங்களை உட்கொள்ளக்கூடாது.

பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எந்த இடையூறும் ஏற்படுத்தக்கூடாது” என்பது உள்ளிட்ட  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.