அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என உத்தரவிடக் கோரி மனு

 
eps

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ். சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுக கட்சியில் நிறுவனர் எம்.ஜி.ஆர்., பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய விதிகளுக்கு முரணாக ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இரட்டை தலைமை முறையை ஒழித்துவிட்டு, ஒற்றை தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியில் கட்சி முடிவுகளை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் இடைக்காலக் கோரிக்கை வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது என்றும், அவரை தேர்ந்தெடுக்கும் வகையில் ஜூலை 11ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட (3,4,5,6,7) தீர்மானங்களை ஏற்கக் கூடாது என்றும் உத்தரவிடவும் கோரிக்கை வைத்துள்ளார்.

சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.