ஓபிஎஸ் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!!

சென்னையில் ஓபிஎஸ் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்களிடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் இரண்டு போலீசார் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் தலையிட்ட வருவாய் துறை அதிமுக அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தது. அத்துடன் பல்வேறு பகுதிகளில் ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்கள் வன்முறையிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சென்னை ஆர்.ஏ.புரம் பசுமை வழி சாலையிலுள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு கூடுதல் காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் இல்லத்திற்கு 15 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த நிலையில் 30க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக அலுவலக ஆவணங்களை எல்லாம் சமூகவிரோதிகள் அள்ளி சென்றதாகவும், ஓபிஎஸ் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் ரவுடிகளுடன் நுழைந்து கட்சி நிர்வாகிகளை தாக்கியுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.