பத்திரப்பதிவு கூடுதல் ஐ.ஜி. சீனிவாசன் மீது வழக்குப்பதிவு - லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை..
முறைகேடு புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பத்திரப்பதிவு கூடுதல் ஐ.ஜி. சீனிவாசன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உச்சநீதிமன்ற குழுவால் முடக்கப்பட்ட பி.ஏ.சி.எல் சொத்துகளை முறைகேடாக விற்க உதவிய புகாரில் கடந்த வாரம் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.
கடந்த 2011 - 12 ஆம் ஆண்டில் பி.ஏ.சி.எல் என்ற நிறுவனம் ரியல் எஸ்டேட், விவசாய நிலங்கள் வழங்குவதாக சுமார் 6 கோடி முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்து, மோசடி செய்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு நிலுவையில் இருந்தது. அப்போது அந்நிறுவனம் பெற்ற சுமார்ரூ.50 ஆயிரம் கோடி அளவிலான நிலமானது, உச்சநீதிமன்றக் குழுவால் முடக்கப்பட்டது. அதாவது முதலில் அந்த நிலங்களை விற்பனை செய்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி வழங்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதேநேரம், சிபிஐயும் இது தொடர்பாக 2016ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இருதரப்பும் நடவடிக்கை மேற்கொண்டதால் , பி.ஏ.சி.எல் தொடர்பான நிலங்களை விற்பனை செய்யக்கூடாது என அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. அந்தவகையில் தமிழகத்தில் தலைமை செயலாளருக்கும், வருவாய் துறை செயலாளருக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் இந்த கடிதத்தையும், உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி, பத்திரப்பதிவு துறையின் கூடுதல் ஐ.ஜி.-யாக இருந்த கே.வி.சீனிவாசன் அந்த நிலங்களை முறைகேடாக விற்க உதவியுள்ளார்.
இவர் சட்டவிரோதமாக அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்களுடன் சேர்ந்து பி.ஏ.சி.எல் நிறுவனம் தொடர்பான 609 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்தது தெரியவந்தது. இது தொடர்பான புகார்கள் பெறப்பட்டதை அடுத்து கடந்த வாரம் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று பத்திரப்பதிவு துறையின் கூடுதல் ஐ.ஜி. கே.வி.சீனிவாசன் மீது லஞ்சஒழிப்புத்த்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.