சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக 1855 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னையில் மட்டும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஐந்து இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடபட உள்ளது . சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை தொடர்ந்து 16, 17 ஆம் தேதிகளில் மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என அரசு விடுமுறை நாட்களுடன் பொங்கல் விடுமுறையும் இணைந்து 4 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் சொந்த ஊர்களுக்கு ஏராளமான பொதுமக்கள் செல்ல உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் உட்பட 16 ஆயிரத்து 932 பேருந்துகளை தமிழக முழுவதும் பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்படும் என்று அறிவித்திருந்தது.
அதன்படி பன்னிரண்டாம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது. அதன்படி நேற்று சென்னை கோயம்பேட்டில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது.இன்று வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் 1855 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனை ஓட்டி மாலை முதலே கோயம்பேட்டில் வெளியூர் செல்ல பொதுமக்கள் வருகை தந்தனர். தமிழக அரசு சிறப்பான ஏற்பாட்டின் மூலம் எளிதில் தங்களது சொந்த ஊருக்கு செல்ல வசதியாக இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
எனினும் அதிக அளவில் பொதுமக்கள் மாலை முதலே கோயம்பேடு நோக்கி வருகை தந்ததால் கோயம்பேட்டில் இருந்து நெற்குன்றம், மதுரவாயில், பூந்தமல்லி வழியாக செல்லும் சாலைகள் அனைத்தும் கடும் போக்குவரத்து நெரிசல் சிக்கித் தவித்தது. இதனை அடுத்து ஏராளமான போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.