ஆளுநர் ஆர்.என்.ரவி மீது நடவடிக்கை.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பரிந்துரை..

 
Draupadi Murmu 1

தமிழ்நாடு அரசின் புகாரின்பேரில் ஆளுநர் ஆர்.என்.ரவி மீது  உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பரிந்துரை செய்துள்ளார்.

தமிழகத்தில்  ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.  கடந்த 9-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி , அரசு  தயாரித்துக் கொடுத்த  உரையை அப்படியே வாசிக்காமல், சில வார்த்தைகளை தவிர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.   அத்துடன்  முதலமைச்சர் பேரவையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றியதும்,  தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்பாகவே  சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.

 ஆளுநர் ஆர்.என் ரவி

இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநர் மரபு மீறி நடந்துகொண்டதாகக் கூறி விமர்சனத்தை முன்வைத்தனர்.  தமிழ்நாடு ஆளுநர் கடந்த 9ம் தேதி சட்டமன்றத்தில் நடந்துகொண்ட விதம் குறித்தும், தொடர்ந்து தமிழ்நாட்டு நலனுக்கு எதிராகவும்,   அரசியல் சாசன விதிகளை மீறியிம் ஆளுநர்  செயல்பட்டுவருவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதினார். அதனை  நேற்று முன்தினம்  டி.ஆர்.பாலு, ஆ.ராஜா. வில்சன் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் குழு குடியரசு தலைவரை நேரில்  சந்தித்து வழங்கினர்.  அப்போது  ஆளுநர் செயல்பட்டுவரும் விதம் குறித்தும் ஜனாதிபதியிடம்  விரிவாக  விளக்கப்பட்டது.

tn

 அதனை விரிவாகக் கேட்டறிந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு  உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரின் கடிதத்தை மத்திய  உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு  குடியரசு தலைவர் அனுப்பியுள்ளார். நடவடிக்கை எடுப்பது தொடர்பாக குடியரசு தலைவர் தனது குறிப்புடன்  முதலமைச்சரின் கடிதத்தை  மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.