ஆதார் எண் இணைப்பு - அரசியல் கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை!!
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் சென்னையில் மாநில தேர்தல் அதிகாரி நாளை மறுநாள் ஆலோசனை நடத்துகிறார்.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி நாளை மறுநாள் முதல் தொடங்குகிறது. 2023 மார்ச் 31ம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.இதற்கென 6 பி என்ற படிவமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நாளை மறுநாள் ஆலோசனை நடத்தப்படுகிறது. தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில், தொடர்ந்து மாவட்டங்களில் தலைமை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தலைமையிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பது, வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் இதற்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.