கமலாலயத்தில் அதிமுக - பாஜக பேச்சுவார்த்தை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக- பாஜக இடையே நாளை கமலாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது என்று தகவல் பரவுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி தொகுதிக்கு அடுத்த மாதம் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்ட தமாககா இந்த முறையும் போட்டியிட விரும்பியது. ஆனால் அதிமுகவுடனான பேச்சு வார்த்தைக்கு பின்னர் தமாகா போட்டியிடவில்லை என்றும் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கிறது என்றும் அறிவித்துள்ளார் ஜி. கே. வாசன்.
இதை அடுத்து அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி அணி ஒரு வேட்பாளரை நிறுத்த முடிவு எடுத்திருக்கிறது. ஓபிஎஸ் அணியும் இந்த இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்திருக்கிறது. அதே நேரம் கூட்டணியில் இருக்கும் பாஜகவும் களமிறங்க முடிவு செய்திருக்கிறது . இதனால் அதிமுக பாஜக இணைந்து போட்டியிடுகிறதா ? அதிமுகவுக்கு பாஜக ஆதரவளிக்கிறதா அல்லது பாஜகவுக்கு அதிமுக ஆதரவளிக்கிறதா அல்லது அதிமுகவும் பாஜகவும் தனித்தனியாகவே களம் இறங்குகிறதா என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.
இந்த நிலையில் இது தொடர்பாக முடிவு எடுக்க நாளை மாலை நாலு மணி அளவில் தமிழக பாஜக தலைமையகம் கமலாலயத்திற்கு அதிமுகவின் மூத்த தலைவர்கள் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தை நடத்த செல்கிறார்கள் என்ற தகவல் வருகிறது.