கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பிரிவுகள் குறைப்பு- ஓபிஎஸ் கண்டனம்

 
Ops

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து வசதிகளுடன் செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனையின் பெரும்பாலான சிகிச்சைப் பிரிவுகளை குறைத்து, மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியுள்ள திமுக அரசிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு நாட்டின் மனித வளர்ச்சியின் அளவினை நிர்ணயிப்பதிலும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியின் அளவுகோலாகத் திகழ்வதிலும், முக்கியப் பங்கு வகிப்பது மக்கள் நல்வாழ்வு என்று சொன்னால் அது மிகையாகாது.

இதன் அடிப்படையில், அனைத்து மக்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பினை அளித்திடும் வகையில், அரசு மருத்துவமனைகளுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்; மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த மற்றும் மருத்துவம் சாராத பணியாளர்களை நியமித்தல், மக்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே தரம் வாய்ந்த மருத்துவ வசதிகள் கிடைக்க வழிவகை செய்தல், தொழில்நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்தி உயர்தர மருத்துவ வசதிகளை அளித்தல் போன்ற முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசிற்கு உண்டு. ஆனால், தி.மு.க. அரசோ இதற்கு முற்றிலும் முரணான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


கிருஷ்ணகிரி நகரில் செயல்பட்டு வந்த மாவட்ட அரசு மருத்துவமனையில் தினந்தோறும் சராசரியாக 1,200 வெளி நோயாளிகளும், 500 உள் நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்பட்ட பின்பு, வெளி நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரை, மருந்துகள் இந்த மருத்துவமனையில் வழங்கப்பட்டன. மொத்தத்தில், அனைத்து வசதிகளையும் கொண்ட மருத்துவமனையாக விளங்கிக் கொண்டிருந்தது.

Tamil Nadu: In ruling AIADMK, O Panneerselvam-led faction show signs of  dissent

இந்த நிலையில், சென்ற மாதம் முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலுப்பள்ளியில் செயல்படத் தொடங்கியதையடுத்து, கிருஷ்ணகிரி நகரில் செயல்பட்டு வந்த மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைகள் படிப்படியாக குறைக்கப்பட்டன என்றும், தற்போது குழந்தைகள் பிரிவு மற்றும் மகப்பேறு மருத்துவப் பிரிவு மட்டுமே செயல்படுவதாகவும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களுக்கு மாத்திரை வாங்க வேண்டுமென்றாலும் 11 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். விபத்து ஏற்பட்டால் முதலுதவி செய்வதற்கான வசதி கூட தற்போது மருத்துவமனையில் இல்லை என்று கூறப்படுகிறது.

மேலும், திடீர் உடல் நலக் குறைவோ, மாரடைப்போ, விபத்தின் காரணமாக எலும்பு முறிவு, தலைக்காயம் ஆகியவை ஏற்பட்டாலோ, 11 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை உள்ளதாகவும், இவ்வளவு தூரம் பயணிக்கும்போது உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மருத்துவமனைக்கு மூடு விழா நடத்தப்பட்டு விடுமோ என்ற அச்சமும் அப்பகுதி மக்களிடையே நிலவுகிறது. வயது முதிர்ந்தவர்களும், நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் வெகு தூரம் பேருந்தில் பயணித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்வது என்பது மிகவும் கடினம். தனியார் வாகனங்களில் செல்வது என்பதும், தனியார் மருத்துவமனைகளை நாடுவது என்பதும் ஏழை, எளிய மக்களுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும். ஏற்கெனவே நல்ல முறையில் இயங்கி வரும் மருத்துவமனையின் வசதிகளை குறைப்பது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

கிருஷ்ணகிரி நகரில் அமைந்துள்ள மாவட்ட அரசு மருத்துவமனையின் வசதிகளை படிப்படியாக குறைப்பதன் மூலம், கிருஷ்ணகிரி நகரப் பகுதியில் உள்ள ஒரு இலட்சம் மக்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஒரு இலட்சம் மக்கள் என கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி நகரில் அமைந்துள்ள மாவட்ட அரசு மருத்துவமனை முன் எப்போதும் போல் அனைத்து வசதிகளுடன் செயல்பட வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கிருஷ்ணகிரி நகரில் அமைந்துள்ள மாவட்ட அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் செயல்படுவதற்குத் தேவையான நடவடிக்கையினை விரைந்து எடுக்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.