அதிமுக பொதுக்குழு மனநிறைவோடு சிறப்பாக நடைபெறும்- ராஜன் செல்லப்பா
அதிமுக பொதுக்குழு மனநிறைவோடு சிறப்பாக நடைபெறும் என எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் விளாச்சேரியில் உள்ள தமிழறிஞர் பரிதி மாற்கலைஞரின் நினைவு இல்லத்தில் அவரது 152-வது பிறந்த நாளையொட்டி மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, எதிர்க்கட்சி சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா, “அதிமுக பொதுக்குழு மனநிறைவோடு சிறப்பாக நடைபெறும், நிச்சயம் எல்லாம் நல்லதே நடக்கும் என தெரிவித்தார். அதிமுக 2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தது. அதே போல் 2021 சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தோம். உள்ளாட்சித்தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.
எம்ஜிஆர் படங்களில் மூன்று முறை அடி வாங்குவார். அதன் பின் நான்காவது முறை திருப்பி அடிப்பார். அதுபோல வருகின்ற 18-ம் தேதி அதிமுக ஆதரவோடு பழங்குடியின பெண் திரெளபதி முர்மு மிகப்பெரிய வெற்றியை பெற உள்ளார். இது அதிமுகவுக்கு கிடைக்கும் மிகப்பெரிய வெற்றி. திமுகவுக்கு கிடைக்கு மிகப்பெரிய தோல்வியாகும்.இந்த மூன்றாண்டு காலத்தில் திமுகவுக்கு கிடைக்கும் மிகப்பெரிய தோல்வி. திரெளபதி முர்முவின் வெற்றி அதிமுகவுக்கு முதல் அடித்தளம். தொடர்ந்து அதிமுக வெற்றியை பெறும்” என பேசினார்.


