இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு - ஏ.சி.சண்முகம் அறிவிப்பு

 
AC Shanmugam

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரை நிறுத்தினால் ஆதரிப்போம் என புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார். திருமகன் ஈவேராவின் மறைவால் ஈரோட் கிழக்கு சட்டமன்ற தொகுதி தற்போது காலியாகியுள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 02ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது.  இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலில் போட்டியிடும் என திமுக அறிவித்துள்ளது. அதிமுகவை பொறுத்தவரையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.  அ.ம.மு.க.வும் தனியாக போட்டியிடுகிறது. இதேபோல் பாஜகவும் தனித்து போட்டியிட ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. 

bjp

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரை நிறுத்தினால் ஆதரிப்போம் என புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஏ.சி.சண்முகம், தமிழக அரசியலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது இக்கட்டான சூழ்நிலை உருவாகி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரை நிறுத்தினால், புதிய நீதிக் கட்சி அதனை வரவேற்கும் என தெரிவித்தார்.