"பாஜகவை கண்டித்து வரும் 27-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம்" - நடிகை காயத்ரி ரகுராம் அறிவிப்பு
பாஜகவை கண்டித்து வரும் 27-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் தொடங்க உள்ளதாக நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார்.
பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அதிரடியாக தெரிவித்தார். அத்துடன் தொடர்ந்து அண்ணாமலை மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். அண்ணாமலைக்கு இசட் வகை பாதுகாப்பு அளிக்கப்பட்டது குறித்து நேற்று விமர்சித்திருந்த காயத்ரி ரகுராம், ஒரு பெண்ணைப் பற்றி தவறாக பேசும் ஒரு தலைவருக்கு இஸட் வகை பாதுகாப்பு . ராஜினாமா செய்ய சரியான முடிவு எடுத்தேன். பெண்கள் பாதுகாப்பு சூப்பர் என்று கூறியிருந்தார் . அத்துடன் என் தொழிலை கெடுத்ததற்கு நன்றி, என் பெயரை கெடுத்ததற்கு நன்றி , என் பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி , என்னை மானபங்கம் செய்ததற்கு நன்றி , என் எட்டு வருட சேவை கடின உழைப்பு மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டதற்கு நன்றி என்று தொடர்ந்து பாஜகவுக்கும் அண்ணாமலைக்கும் எதிரான தனது கருத்துக்களை கூறி வருகிறார்.
இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "பா.ஜ.க பெண்களை அவமானப்படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காகவும் ஜனவரி 27-ம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடை பயணம் நடத்துவேன். தனியாக இருந்தாலோ அல்லது யார் வேண்டுமானாலும் என்னுடன் சேரலாம். எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படவில்லை. என் உயிர் போனாலும் செய்வேன். நான் நீதிக்காக போராடுவேன். நான் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். இது அரசியலில் பொது சேவை மற்றும் பொது வாழ்க்கை பெண்களுக்கானது. இந்த நடைப்பயணம் அரசியலில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், பாதிக்கப்பட்ட சாதாரண பொது பெண்களுக்கும், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பாதிக்கப்பட்ட காவல்துறை பெண்களுக்கும் ஆகும்" என்று பதிவிட்டுள்ளார்.
பா.ஜ.க பெண்களை அவமானப்படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காகவும் ஜனவரி 27-ம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடை பயணம் நடத்துவேன். தனியாக இருந்தாலோ அல்லது யார் வேண்டுமானாலும் என்னுடன் சேரலாம். எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படவில்லை.
— Gayathri Raguramm 🇮🇳🚩 (@Gayatri_Raguram) January 14, 2023
அதேபோல் மற்றொரு பதிவில், "பாஜகவின் உண்மையான முகத்தை நான் முதன்முறையாகப் பார்த்தேன், பாஜகவின் உண்மை முகத்தைக் காட்டியதற்கு நன்றி. வளர்ப்பு மகனுக்கு இங்கு அதிகாரம் அதிகம், பாஜகவில் வாரிசு அரசியல் உள்ளது. பெண்களுக்கு மரியாதை இல்லை. பெண்கள் இங்கு அடிமைகள். பாஜகவிடம் தர்மம் இல்லை. புதிதாக சேர்ந்த அனைத்து பெண்களும் அதை விரைவில் உணர்ந்து கொள்வார்கள். அவர்கள் உன்னை பயன்படுத்தி தூக்கி எறிவார்கள். நீங்கள் வளர்ப்பு மகனின் தந்தையுடன் நெருக்கமாக இல்லாவிட்டால், நீங்கள் வளர மாட்டீர்கள். வளர்ப்பு மகன் உன்னை தந்தையின் அருகில் செல்ல அனுமதிக்க மாட்டான். சிறிய ரகசியம்" என்று குறிப்பிட்டுள்ளார்.