ரேஷன் அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ள, இன்று சிறப்பு குறைதீர் முகாம்..
நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் இன்று நடைபெறுகிறது.
பொது விநியோகத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் பொருட்டு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்திருக்கிறது. ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமைகளில் இந்த முகாம் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதன்படி நவம்பர் 2022 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் இன்று (12.11. 2022 ) காலை 10.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை நகல் கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் இந்த முகாமில் மேற்கொள்ளப்படும். .
மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்தகுடிமக்கள் உள்ளிட்டோருக்கான அங்கீகார சான்றும் வழங்கப்படுகிறது. மேலும் பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் முகாமில் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இம்முகாமில் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இந்த முகாம் நடைபெறவுள்ளதை அடுத்து, குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.