21 வயது நிரம்பியவர் அவரது விருப்பப்படி வாழ அவருக்கு உரிமை உண்டு- ஐகோர்ட்

 
madurai high court

தன்பாலின உறவில் இருந்ததால், குடும்பத்தால் கடத்தப்பட்ட பெண்ணை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க கோரி சக தோழி தொடர்ந்த வழக்கில் அவரது விருப்பப்படி செல்ல அனுமதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Madras High Court slams favouritism, orders examMadras High Court slams favouritism, orders exam

விருதுநகரைச் சேர்ந்த  பெண் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்,  எனக்கும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக இருவரும் காதலித்து வந்தோம். கடந்த 7ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டோம். 

இந்நிலையில் அந்த பெண்ணின் குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு,  அப்பெண்ணை கடத்திச் சென்றுவிட்டனர். அவரை மீட்டுத் தரக்கோரி காவல்துறையினரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அப்பெண்ணின் சகோதரர் தன்பாலின உறவை விட்டுவிடுமாறு வலியுறுத்தி, அவரை கடுமையாக தாக்கியுள்ளார். என்னையும் மிரட்டினார். இதுதொடர்பாக வத்தலகுண்டு துணை காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும், தற்போது வரை வத்தலகுண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை. அப்பெண்ணின் உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது. ஆகவே பெண்ணை மீட்டு நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு, மனுதாரரின் தோழி 21 வயது நிரம்பியவர். ஆகவே அவரது விருப்பப்படி  செல்ல அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.