ஆண்டிபட்டி அருகே அருவியில் குளித்துக்கொண்டிருந்த புதுமாப்பிள்ளை பலி
ஆண்டிபட்டி அருகே மதுஅருந்தி அருவியில் குளித்துக்கொண்டிருந்தபோது வழுக்கி விழுந்து புது மாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை நகர் காளவாசல் அருகே உள்ள சம்மட்டியாபுரத்தை சேர்ந்த பெருமாள் என்பவரின் 29 வயது மகன் அருண்பாண்டி. இவருக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில், தனது நண்பர்கள் 3 நபர்களுடன் 2 இருசக்கர வாகனங்களில் இன்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உப்புதுறை மேற்குத் தொடர்ச்சிமலையில் உள்ள யானைக்கஜம் அருவிக்கு சுற்றுலா வந்தார் .
அங்கு மது அருந்திவிட்டு குளித்து கொண்டிருந்தபோது பாறையில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே அருண்பாண்டி உயிரிழந்தார், இதுகுறித்து அருண்பாண்டியின் நண்பர்கள் மயிலாடும்பாறை காவல்நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மயிலாடும்பாறை போலீசார் உடலைமீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா வந்த புது மாப்பிள்ளை பலியான சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.