'துணிவு' படம் ஓடிய தியேட்டருக்குள் புகுந்து போதை ஆசாமி அட்டகாசம்
சங்கரன்கோவில் தனியார் திரையரங்கில் சேரை உடைத்த போதை ஆசாமி கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கீதாலயா தியேட்டர் என்னும் திரையரங்கில் அஜித் நடித்த துணிவு படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று படம் ஓடிக் கொண்டிருக்கும் போது இடையில் வந்த லட்சுமி அப்புறம் ஏழாவது தெருவை சேர்ந்த செல்லையா என்பவரது மகன் கருப்பசாமி என்பவர் குடிபோதையில் தியேட்டருக்குள் நுழைந்து உள்ளே செல்ல முயன்றார். அவரை திரையரங்க ஊழியர்கள் தடுத்து வெளியே அனுப்பினர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர், வாகன நிறுத்தும் இடத்தில் வாகன காப்பாளருக்கு போடப்பட்டிருந்த நாற்காலி ஒன்றை எடுத்து தரையில் போட்டு உடைத்தார். உடனடியாக தியேட்டர் நிர்வாகம் அவரை பிடித்து காவல்துறையினரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தது. அதன்பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். போதை ஆசாமி தியேட்டருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடும் சுமார் பத்து நிமிட சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகிவருகிறது.