தலைவர் தேர்தலில் வெளிப்படைத்தன்மை தேவை - காங்கிரஸ் மூத்த எம்.பிக்கள் கூட்டாக கடிதம்..

 
 தலைவர் தேர்தலில் வெளிப்படைத்தன்மை தேவை - காங்கிரஸ் மூத்த எம்.பிக்கள் கூட்டாக கடிதம்..

காங்கிரஸ்  கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்கும்  தேர்தலை வெளிப்படைத் தன்மையுடனும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என சசி தரூர், கார்த்தி சிதம்பரம்  உள்ளிட்ட 5 காங்கிரஸ் எம்.பிக்கள் அக்கட்சியின்  மத்திய தேர்தல் குழுவின் தலைவர் மதுசூதன் மிஸ்ட்ரிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அக்டோபர் 17ம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தல் தொடர்பாக அக்கட்சி மூத்த தலைவர்கள் பலரும் அவ்வப்போது முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.  அந்தவகையில், சசி தரூர், கார்த்தி சிதம்பரம், ப்ரத்யூதி போர்டோலோய், அப்துல் காலீக், மனீஷ் திவாரி ஆகிய 5 பேரும் , கடந்த செப்டம்பர் 6 தேதியிடப்பட்டு கூட்டுக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.  அதில் காங்கிரஸ் தலைவர் தேர்தலை  வெளிப்படைத் தன்மையுடன் நடத்த வேண்டும்  என வலியுறுத்தியுள்ளனர்.  

பிரியங்கா, ராகுல்,சோனியா

 அந்தக் கடிதத்தில், “நாங்கள் வாக்காளர் பட்டியலைக் கேட்பதற்கு பல தவறான கற்பிதங்கள் எழுவது துரதிர்ஷ்டவசமானது, வேட்புமனு தாக்கலுக்கு முன்னராக மத்திய தேர்தல் குழு, மாநில காங்கிரஸ் கமிட்டியில் இருந்து யாருக்கெல்லாம் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அதிகாரம் வழங்கப்படுகிறது என்ற விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றே நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்தப் பட்டியலில் யாருக்கு வேட்பாளரை பரிந்துரைக்கும் அதிகாரமும், யாருக்கெல்லாம் வாக்களிக்கும் அதிகாரமும் இருக்கிறது என்பது தெரியவரும்.

சிதம்பரம்

ஒருவேளை தேர்தல் குழுவுக்கு இதை பகிரங்கமாக வெளியிடுவதில் ஏதேனும் தயக்கம் இருந்தால் அந்தத் தகவலை வாக்காளர்களுக்கும், போட்டியிடக் கூடிய வேட்பாளர்களுக்குமாவது ரகசியமாக தெரிவிக்கலாமே. ஏனெனில் தேர்தலில் போட்டியிடுபவர்களும், வாக்காளர்களும் நாட்டில் உள்ள 28 மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகங்களுக்கும், 9 யூனியன் பிரதேச கட்சி அலுவலகங்களுக்கும் நேரில் சென்று வாக்காளர்கள் விவரங்களை அறிவது என்பது சாத்தியமற்றது. நியாயமான நேர்மையான வெளிப்படையான தேர்தல் நடைமுறையை மட்டுமே நாங்கள் எதிர்பார்க்கிறோம் ” என்று குறிப்பிடப்படுள்ளது.